செய்திகள்
திருச்சி விமான நிலையம்

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.11½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

Published On 2019-11-22 08:43 GMT   |   Update On 2019-11-22 08:43 GMT
திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.11,49,859 லட்சம் மதிப்புள்ள நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கே.கே.நகர்:

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகம்மது சிராசி (வயது 31) என்பவர் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர் உடலில் மறைத்து 86 கிராம் தங்கத்தையும், கழுத்தில் அணிந்து 30 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.4,41,777 என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் முகம்மது சிராசியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று நள்ளிரவு துபாயில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த நிஜாம் முஹைதீன் (23) என்பவர் ரூ.3,66,240 லட்சம் மதிப்புள்ள 96 கிராம் தங்கத்தை செயின் வடிவில் உடலில் மறைத்து எடுத்து வந்தார். அதனை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இதேபோன்று சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணி ஒரத்தநாட்டைச் சேர்ந்த லட்சுமி என்பவரிடம் இருந்து ரூ.3,41,442 லட்சம் மதிப்புள்ள செயின் வடிவிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.11,49,859 லட்சம் மதிப்புள்ள நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
Tags:    

Similar News