செய்திகள்
கைது

மூலனூர் அருகே புதுப்பெண் கொலையில் கள்ளக் காதலன் கைது

Published On 2019-11-20 13:17 GMT   |   Update On 2019-11-20 13:17 GMT
வெள்ளகோவில் அருகே புதுப்பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.

தாராபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராமபுதூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். அப் பகுதியில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். அதே ஓட்டலில் ராமபுதூரை சேர்ந்த திருமங்கை (33) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 5 மாதத்திற்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.

சம்பவத்தன்று திருமங்கை தனது சித்தி மற்றும் அவரது மகளுடன் நாமக்கல் அருகே மோகனூரில் உள்ள கோவிலுக்கு செல்வதாக கணவர் ரமேசிடம் கூறி சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் திருமங்கை திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியம் மாலமேடு கவுண்டப்ப கவுண்டன் புதூர் கிராமம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றின் கரையோரம் புதரில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

அவரது கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு இருந்தது. கைகள் பின் பக்கம் கட்டப்பட்டிருந்தது. இடது கையில் காயமும் காணப்பட்டது.

இது குறித்து மூலனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து திருமங்கை பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திருமங்கை கொலை குறித்து அவரது கணவர் ரமேசுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர் மூலனூர் விரைந்து வந்தார். உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

கொலையாளிகளை பிடிக்க தாராபுரம் டி.எஸ்.பி. ஜெயராம், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதாமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

திருமங்கைக்கு வந்த செல்போன்அழைப்பு குறித்து விசாரித்தனர். அப்போது கொலையாளி குறித்து துப்பு துலங்கியது.

சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் மகன் தனபால் (24) என்பவர் திருமங்கையை கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

நான் நாமக்கல்லில் ஜே.சி.பி. எந்திரம் ஓட்டி வருகிறேன். நாமக்கல் பஸ் நிலையத்தில் திருமங்கை தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார்.

அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் திருமங்கை கடந்த 5 மாதத்திற்கு முன் ரமேசை திருமணம் செய்து கொண்டார். இதனால் நான் ஆத்திரத்தில் இருந்தேன்.

சம்பவத்தன்று அவருக்கு போன் செய்தேன். அவரும் வந்தார். அவரை மூலனூர் அமராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்று கொலை செய்து விட்டு பிணத்தை புதரில் வீசி விட்டு தப்பி ஓடி விட்டேன். 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மூலனூர் அமராவதி ஆற்றங்கரை பகுதி தனபாலுக்கு எப்படி தெரியும். அவருக்கு உள்ளூரை சேர்ந்த யாராவது உதவி செய்தார்களா? என அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலை செய்யப்பட்ட திருமங்கை உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

ஆனால் உடலை வாங்கி செல்ல யாரும் வராததால் அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் இன்றும் வைக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News