செய்திகள்
தற்கொலை முயற்சி

இரணியல் அருகே பள்ளி வளாகத்தில் மாணவன் தற்கொலை முயற்சி

Published On 2019-11-19 11:30 GMT   |   Update On 2019-11-19 11:30 GMT
இரணியல் அருகே தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் பள்ளி வளாகத்தில் வி‌ஷம் குடித்து மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரணியல்:

இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்த மாணவர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

வகுப்பு தேர்வில் மாணவன் குறைவான மதிப்பெண் பெற்றார். இதையடுத்து மாணவனை ஆசிரியரும், பெற்றோரும் கண்டித்தனர். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவன், சக மாணவர்களுடன் பேசாமல் அமைதியாக இருந்தார். திடீரென பள்ளி வளாகத்தில் மாணவன் மயங்கி கீழே விழுந்தார். இதைப்பார்த்த மாணவர்கள் ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே மயங்கிய மாணவனை மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் மாணவன் வி‌ஷம் குடித்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் வி‌ஷம் குடித்தது குறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். வகுப்பறையில் மாணவன் வி‌ஷம் குடித்த சம்பவம் மாணவர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News