கோயம்பேடு மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை கடும் உயர்வு
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள மதுரை, தாராபுரம், ஒட்டன்சத்திரம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, மராட்டியம் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் முருங்கைக்காய் விற்பனைக்கு வருகிறது தினமும் 10 முதல் 15 லாரிகள் வரை வந்து கொண்டிருந்த முருங்கைக்காய் தற்போது 2 லாரிகளில் மட்டுமே வருகிறது. மழையால் முருங்கைக்காய் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது.
இதன் காரணமாக முருங்கைக்காய் விலை அதிரடியாக அதிகரித்துவிட்டது. கிலோ ரூ.40-க்கு விற்ற முருங்கைக் காய் தற்போது ரூ.140-க்கு விற்கப்படுகிறது சில்லரை விற்பனையில் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ரூ.5-க்கு விற்று வந்த ஒரு முருங்கைக்காய் தற்போது ரூ.25-வரை விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் விலையை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் உயர்ந்து இருப்பதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று காலை நாசிக் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.62-க்கும், பெங்களூர் வெங்காயம் ரூ.55, ஆந்திரா வெங்காயம் ரூ.50-க்கும் விற்பனை ஆனது. சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் ரூ.80-க்கும் சில்லரையில் ரு.120 வரையும் விற்கப்படுகிறது.