செய்திகள்
ராஜன்செல்லப்பா

ஸ்டாலினை மனதில் வைத்தே முக அழகிரி பேசியுள்ளார்- ராஜன்செல்லப்பா பேட்டி

Published On 2019-11-15 12:54 GMT   |   Update On 2019-11-15 12:54 GMT
மு.க.அழகிரி பேட்டியளிக்கும்போது மு.க.ஸ்டாலினிடம் தலைமைக்கான தகுதி இல்லை என்பதை சுட்டிக்காட்டவே மறைமுகமாக வெற்றிடம் உள்ளதாக கூறியதாக ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம்:

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ. வுமான ராஜன்செல்லப்பா உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.வினரிடம் விருப்ப மனுக்களை இன்று வாங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வினரிடம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை பெற்று வருகிறோம். கட்சியினர் ஆர்வமுடன் மனு அளித்து வருகின்றனர். தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்போதோ நிரப்பி விட்டார்.

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பேட்டியளிக்கும்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைக்கான தகுதி இல்லை என்பதை சுட்டிக் காட்டவே அவரை மனதில் வைத்தே மறைமுகமாக வெற்றிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க.வில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை. அ.ம.மு.க.வை பொருத்தவரை தேர்தலில் 2 சதவீதம் கூட வாக்குகள் பெறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. உள்ளாட்சி தேர்தலில் முழுமையான வெற்றியை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News