செய்திகள்
உதயநிதி ஸ்டாலின்

சென்னை மேயர் தேர்தல்- உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

Published On 2019-11-15 05:12 GMT   |   Update On 2019-11-15 05:12 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட கோரி விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது. தேர்தல் நடைபெறும் தேதியை மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது.

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது.

தி.மு.க.வில் 20-ந் தேதி வரை விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை கழகம் அல்லது மாவட்டக் கழகத்தில் விருப்ப மனுவை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர்.

மாநகராட்சி மேயர் பதவிக்கு ரூ. 50 ஆயிரம், கவுன்சிலர் பதவிக்கு ரூ. 10 ஆயிரம், நகர்மன்ற தலைவருக்கு ரூ. 25 ஆயிரம், நகர்மன்ற உறுப்பினருக்கு ரூ. 5 ஆயிரம், பேரூராட்சி மன்ற உறுப்பினருக்கு ரூ. 2.500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு ரூ. 10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ. 5 ஆயிரம் என்று விருப்ப மனுவுக்கு கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

ஆதி திராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட விரும்புவோர் கட்டணத் தொகையில் பாதி மட்டும் செலுத்தினால் போதும்.

சென்னை மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும், சென்னை தெற்கு மாவட்டத்தில் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும், சென்னை கிழக்கு மாவட்டத்தில் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும், சென்னை வடக்கு மாவட்டத்தில் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. ஏற்பாட்டிலும் விருப்பமனு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டக் கழகத்தில் மனு பெற விரும்பாதவர்கள் தலைமைக் கழகம் சென்று விருப்ப மனுவை வாங்கிச் செல்கின்றனர்.

சென்னையில் மேயர், கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிட 100-க்கும் மேற்பட்டோர் அந்தந்த மாவட்டச் செயலாளர்களிடம் விருப்ப மனு பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட கோரி சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ.விடம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிற்றரசு விருப்ப மனுதாக்கல் செய்தார்.

இதேபோல் சென்னை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா, மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கோரி மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.விடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

உதயநிதிக்காக மேலும் பலரும் விருப்பமனு அளித்து வருவதாக தி.மு.க. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News