செய்திகள்
மகா புயல்

புவி வெப்பமயமாதல் - புயல் உருவாவது அதிகரிப்பு

Published On 2019-11-13 09:38 GMT   |   Update On 2019-11-13 09:38 GMT
புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாகின்றன. அவைகள் பல்வேறு மாநிலங்களை தாக்கி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் வங்கக்கடல், அரபிக்கடலில் புயல் உருவாவது சில ஆண்டுகளாக அதிகரித்து உள்ளது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்து உள்ளது. 10 ஆண்டுகளில் 11 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. புவி வெப்பமயமாதல் காரணமாக புயல்கள் உண்டாகுவது அதிகரித்து உள்ளது.



1985-ம் ஆண்டுக்கு பிறகு 2018, 2019-ம் ஆண்டுகளில் தலா 7 புயல்கள் உருவாகி இருக்கிறது. அதேபோல் 2018, 2019-ம் ஆண்டுகளில் தலா 6 அதிதீவிர புயல்கள் இந்தியாவை தாக்கி உள்ளன. அதிகபட்சமாக 1976-ம் ஆண்டு 7 புயல்கள் தாக்கி இருந்தன.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிதீவிர புயலாக ‘பானி’ புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை தாக்கியது. அதேபோல் வாயு, புல்புல் போன்ற புயல்கள் உருவாகி இருந்தன. 2010-2019-ம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 4 புயல்கள் வந்துள்ளன.

1980-ம் ஆண்டு கால கட்டங்களில் சராசரியாக 3 புயல்கள் உருவாகின. இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரி அனுபம் காஷ்யப் கூறும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5 புயல்கள் வருகின்றன.

இதில் 3 புயல்கள் அதிதீவிரமாக உள்ளன. இது புயல்கள் அதிகரிப்பை குறிக்கின்றன’ என்றார்.

Tags:    

Similar News