கொடைக்கானல் அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பலி
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், நடுபட்டி, நல்லூர்காடு, கவுச்சிகொம்பு, ஆடலூர் உள்ளிட்ட பகுதியில் காபி, வாழை, மிளகு, ஆரஞ்சு, சவ்சவ், அவரை, பீன்ஸ் போன்ற பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர்.
அந்த தோட்டத்துக்குள் புகுந்து அங்குள்ள சோலார் வேலி, முள்வேலியை உடைத்து சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பெரும்பாறை அருகே உள்ள நல்லூர்காடு பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (வயது 67), மகள் ராஜாத்தி (35), அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன்.
இவர்கள் 3 பேரும் பக்கத்தில் உள்ள கவுச்சிகொம்பு பகுதியில் நடந்த உறவினர் வீட்டு விஷேச நிகழ்ச்சிக்காக சென்றனர். பின்னர் விஷேசம் முடிந்து அவர்கள் காட்டுபாதை வழியாக நடந்து வந்தனர். நடுப்பட்டி அருகே அவர்கள் வந்தபோது காட்டுயானை ஒன்று திடீரென்று வந்தது. அப்போது மாரியம்மாள் உள்பட 3 பேரையும் கண்ட அந்த யானை அவர்களை துரத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். இருப்பினும் விடாமல் துரத்தி சென்று யானை மாரியம்மாள், ராஜாத்தியையும் தாக்கியது. ராஜேந்திரன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். பின்னர் கீழேவிழுந்த மாரியம்மாளை யானை மிதித்தது.
இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராஜாத்தி படுங்காயம் அடைந்தார். அந்த யானை அருகேயுள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த கன்னிவாடி வனச்சரகர் ரவிசந்திரன், வனவர் தண்டபாணி மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ராஜாத்தியை மீட்டு கே.சி.பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இறந்து போன மாரியம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.