செய்திகள்
மரணம்

சாக்லெட் என நினைத்து எலி மருந்தை தின்ற சிறுவன் பலி

Published On 2019-11-11 06:55 GMT   |   Update On 2019-11-11 06:55 GMT
கோவையில் சாக்லெட் என நினைத்து எலி மருந்தை தின்று சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

கோவை தெலுங்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவரது மகன் முத்துசெல்வன்(வயது 10). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் தனது வீட்டில் விளையாடினார்.

அப்போது வீட்டில் இருந்த சாக்லெட்டை எடுத்து சாப்பிட்டுள்ளார். அதனை சாப்பிட்ட சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்த மற்ற சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து முத்துசெல்வன் பெற்றோரிடம் கூறினர்.

அவர்கள் வந்து பார்த்தபோது சிறுவன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் அவன் சாப்பிட்டதாக கூறிய சாக்லெட்டை எடுத்து பார்த்தனர்.

அப்போது அது சாக்லெட் அல்ல. வீட்டில் எலி தொல்லைக்காக வாங்கி வைத்திருந்த எலி மருந்து என்பதும், அதனை சிறுவன் தெரியாமல் எடுத்து சாப்பிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து பெற்றோர் சிறுவனை தூக்கி கொண்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் இன்று காலை முத்துசெல்வன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாக்லெட் என நினைத்து எலி மருந்தை தின்று சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News