செய்திகள்
சவுந்தரபாண்டி.

சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு ஜெயில்- மகிளா கோர்ட்டு தீர்ப்பு

Published On 2019-11-06 10:38 GMT   |   Update On 2019-11-06 10:38 GMT
திண்டுக்கல் அருகே சிறுமியை கடத்தி கற்பழித்த வாலிபருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு இன்று தீர்ப்பளித்தது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகில் உள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் மகன் சவுந்தரபாண்டி (வயது19). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இருவரும் அண்ணன், தங்கை உறவுமுறையாகும்.

ஆனால் அதனையும் மீறி கடந்த வருடம் மே மாதம் 21-ந் தேதி சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழனிக்கு கடத்தி சென்றார். பின்னர் அவரை மறைவான பகுதிக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி கற்பழித்தார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சவுந்தரபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுமியை கடத்தியதற்காக 7வருடமும், கற்பழித்ததற்காக 10 வருடம் என மொத்தம் 17 வருட சிறை தண்டனையை ஏக காலத்தில் சவுந்தரபாண்டி அனுபவிக்க வேண்டும் என நீதிபதி புருசோத்தமன் உத்தரவிட்டார். மேலும் சவுந்தரபாண்டிக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் அரசு வக்கீலாக கோப்பெருந்தேவி வாதாடினார்.

Tags:    

Similar News