ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை
ராமேசுவரம்:
அந்தமான் அருகேயுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது.
இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், புயலாகவும் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மேலும் ராமேசுவரம், பாம்பன் பகுதியில் உள்ள அனைத்து விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு டோக்கன் வழங்கப்படாததால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போல் மண்டபம் பகுதி விசைப்படகு மீனவர்களுக்கும், மீன்பிடி அனுமதி டோக்கன் வழங்கப்பட வில்லை.