செய்திகள்
மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதையும், சுற்றுலா பயணிகள் குளிப்பதை காணலாம்

வெள்ளப்பெருக்கு குறைந்தது - குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

Published On 2019-11-04 04:11 GMT   |   Update On 2019-11-04 10:23 GMT
குற்றாலம் மெயினருவியில் வெள்ளம் குறைந்ததால் காலையில் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்தனர்.
தென்காசி:

குற்றாலத்தில் சீசன் முடிந்து 2 மாதத்திற்கு மேல் ஆகும் நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை நீடிப்பதால் அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் விழுந்து வருகிறது.

கடந்த வாரம் குற்றாலம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தொடர்ந்து 4 நாட்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதனால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன் பிறகு மழை குறைந்ததால் அருவிகளில் வெள்ளமும் குறைந்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குற்றாலம் மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் நேற்று காலை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாலையில் வெள்ளப்பெருக்கு குறைந்த நிலையில் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இரவில் மீண்டும் மழை கொட்டியதால் மெயினருவியில் இன்று காலை தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் மெயினருவியில் மட்டும் குளிக்க காலையில் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் வெள்ளம் குறைந்ததால் அதிலும் குளிக்க தடை நீக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளித்தனர்.

Tags:    

Similar News