செய்திகள்
இசக்கி வெங்கடேஷ்

நெல்லை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்த என்ஜினீயர்

Published On 2019-11-03 11:02 GMT   |   Update On 2019-11-03 11:02 GMT
நெல்லை அருகே வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டையை சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மகன் இசக்கி வெங்கடேஷ் (வயது 23). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு ஆண்டு பணியாற்றி இருக்கிறார்.

அதன்பிறகு தொடர்ந்து வேலை கிடைக்காததால் சொந்த ஊரான உக்கிரன்கோட்டைக்கு வந்து விட்டார். 2 மாதங்கள் ஆகியும் வேறு வேலை கிடைக்காததால் மனஉளைச்சலில் இருந்து வந்தார். ஆரம்பநிலை மனநிலை பாதிப்புக்கு அரசு மனநல மருத்துவ பிரிவில் கவுன்சிலிங் மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இசக்கி வெங்கடேசின் தந்தை மாரியப்பன் டீக்கடைக்கு சென்று விட்டார். தாயார் சுப்புலட்சுமி தண்ணீர் எடுக்க சென்றார். தங்கைகள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு எதிரே உள்ள சமையல் அறைக்குள் சென்ற இசக்கி வெங்கடேஷ் உட்புறமாக கதவை பூட்டிக் கொண்டு, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

இதில் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தார். சத்தத்தை கேட்டு அங்கு ஓடி வந்த அவரது தாயார், சமையல் அறையின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று கோணிப்பையால் இசக்கி வெங்கடேஷ் மீது பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் இசக்கி வெங்கடேஷ் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News