செய்திகள்
முருகன்

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை

Published On 2019-11-02 04:43 GMT   |   Update On 2019-11-02 04:43 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் முருகனின் மனைவியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி லலிதா ஜூவல்லரியில் கடந்த மாதம் 2-ந்தேதி கடையின் சுவரை துளைத்து ரூ.13 கோடி மதிப்பிலான 28 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மணிகண்டன் என்பவரை போலீசார் திருவாரூரில் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மணிகண்டனுடன் பைக்கில் வந்து தப்பியோடிய சுரேஷ் பின்னர் செங்கம் கோர்ட்டில் சரணடைந்தான். முக்கிய குற்றவாளியான முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்த நிலையில், பெங்களூரு தனிப்படை போலீசார் அங்கு நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 25 கிலோ நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திருவாரூரில் தங்கியிருந்த முருகனின் மனைவி மஞ்சுளாவை, தனிப்படை போலீசார் விசாரணைக்காக திருச்சி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகன் கொள்ளையடித்த நகைகளை வேறு எங்காவது பதுக்கியுள்ளானா? சொத்துக்கள் ஏதும் வாங்கியுள்ளானா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்படும் விசாரணை மூலம் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

Tags:    

Similar News