மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு பகுதியில் சமீபகாலமாக சிலர் திருட்டு மோட்டார் சைக்கிள்களில் வலம் வருவதாக தஞ்சை டி.ஐ.ஜி.க்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் ஒரத்தநாடு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணி சென்றனர்.
அப்போது அண்ணா சிலை பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் வேகமாக தப்பி சென்றார். அவரை போலீசார் விரட்டி சென்று கண்ணந்தங்குடி மேலையூர் பகுதியில் மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர் ஒரத்தநாடு அருகே தலையாமங்கலம் கிராமம் தாந்தோனி பகுதி சக்திவேல் மகன் மகேஷ்(வயது17) என்பது தெரியவந்தது. இவரும், தஞ்சை மேம்பாலம் பகுதியை சேர்ந்த உறவினர் அர்ஜீனன் மகன் கதிரவன்(22) மற்றும் சிலருடன் சேர்ந்து பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருடி அதனை விற்று உல்லாசமாக செலவு செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு தஞ்சைக்கு சென்று கதிரவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.