செய்திகள்
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி
வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக-தேமுதிக கூட்டணி தொடரும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வதற்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா நேற்று கோவிலுக்கு வந்தார். இதையடுத்து அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-தே.மு.தி.க. கூட்டணி தொடரும். இடைத்தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி வெற்றி பெறும். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் குறைசொல்லும் நோக்குடன் பேசாமல் மனித நேயத்துடன் பேசவேண்டும். இந்த விவகாரத்தில் அரசு முறையாக செயல்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.