செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

Published On 2019-10-30 07:10 GMT   |   Update On 2019-10-30 07:10 GMT
ஸ்ரீரங்கம் சார்பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஏராளமான சொத்து, ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி:

திருச்சி திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவிற்கு லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி மாவட்ட லஞ்சஒழிப்பு இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் நேற்று மாலை முதல் இரவு வரை அதிரடி சோதனை நடத்தினர்.

தொடர்ந்து நடந்த பத்திர பதிவுகள் எவ்வளவு, அரசு நிர்ணயித்த தொகை எவ்வளவு என ஒப்பிட்டு ஆய்வு நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1,67,000 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் சார்பதிவாளர் ஆனந்த ராஜனிடம் மட்டும் ரூ.1,07,000 பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் மேலூர் ரோட்டில் உள்ள சார்பதிவாளர் ஆனந்தராஜன் வீட்டில்,லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கி கணக்கையும் ஆய்வு செய்தனர். லாக்கரை சோதனை செய்த போது பணம், நகைகள் இருந்தது.

அனைத்தையும் லாக்கரில் வைத்து பூட்டி சாவியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டம் 7 மற்றும் 7 ( ஏ) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர் விசாரணைக்கு பின் சார்பதிவாளர் ஆனந்த ராஜன் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News