செய்திகள்
மு.க.ஸ்டாலின்

கொலை குற்றங்கள் பற்றி தவறான தகவலை கூறுவதா?- மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2019-10-23 10:09 GMT   |   Update On 2019-10-23 10:09 GMT
கொலை குற்றங்கள் பற்றி தமிழகச் சட்டமன்றத்திற்கு முதல்- அமைச்சர் உண்மையை மறைத்து, தவறான தகவலை கூறியதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது” என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்த பச்சைப் பொய்ப்பிரசாரத்தின் ஈரம் காய்வதற்குள், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள 2017-ம் ஆண்டிற்கான அறிக்கையில், “இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், தமிழகத்தில் மட்டும் 1613 கொலைகள் நடைபெற்று உள்ளது. ‘இந்தியாவில் கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில்’ 6-வது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

“நாட்டில் உள்ள 19 மாநகரங்களில் 162 கொலைகள் நடைபெற்று, ‘கொலைகள் நடந்த மாநகரங்களின் பட்டியலில்’ 4-வது மாநகரமாக சென்னை உள்ளது” என்று வெளிவந்திருப்பதன் மூலம், அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பது, தமிழகப்பொதுமக்களுக்கு ஆதாரபூர்வமாகத் தெரிய வந்திருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காவல்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2016 -ம் ஆண்டு 1511 கொலைகளும், 2017 -ம் ஆண்டு 1466 கொலைகளும், 2018 -ம் ஆண்டு 1488 கொலைகளும் நடந்துள்ளதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த மூன்று வருடங்களில் மட்டும் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 4465 ஆக உயர்ந்து இருக்கிறது.

தமிழகச் சட்டமன்றத்தில், 2017-ம் ஆண்டு1466 கொலைகள் மட்டுமே நடைபெற்றன என்று கூறி விட்டு, தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்திற்கு, அதே வருடத்தில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாக அ.தி.மு.க. அரசு தெரிவித்ததிலிருந்து தமிழகச் சட்டமன்றத்திற்கே முதல்- அமைச்சர் உண்மையை மறைத்து, தவறான தகவலைத் தந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

காவல்துறைச் சீர்திருத்தங்கள், காவலர் நலன் குறித்து கழக ஆட்சியில் மூன்று போலீஸ் கமி‌ஷன்கள், எவ்விதச் சிபாரிசும் இன்றி அமைக்கப்பட்டன. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில், ஒரு போலீஸ் கமி‌ஷனை அமைப்பதற்கே உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டது.

காவல் துறையினருக்கு போதிய வாகன வசதி இல்லை இருக்கின்ற வாகனங்களும் காலாவதியானவை என்ற நிலையில் புலனாய்வுப் பணிகளிலோ, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான எவ்வித முயற்சிகளிலோ, கழக ஆட்சியில் ‘ஸ்காட்லாண்ட் யார்டுக்கு’ இணையாக திறமையாக இருந்த தமிழகக் காவல்துறையால் ஈடுபட முடியவில்லை.

பொதுமக்களுக்கு சட்டத்தின் ஆட்சியை வழங்க முடியாமல், அ.தி.மு.க. ஆட்சியில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் கூட தத்தளித்து நிற்கிறார்கள் என்பது வேதனையானது.

இதன் விளைவாக ‘கூலிப்படைகளின் அட்டகாசம் ‘தலைதூக்கி, ‘எங்கு பார்த்தாலும் கொத்துக் கொத்தாகக் கொலைகள்’ என்ற பயங்கரமான நிலை தமிழகத்தில் நிலவி, இன்றைக்கு இந்தியாவிலேயே ‘ஆறாவது கொலை மாநிலம்’ என்ற அவப்பெயரை மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சி தேடித் தந்திருக்கிறது. இது தமிழகத்திற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள மிகப்பெரிய அவமானம் மட்டுமல்ல அழிக்க முடியாத கறையாகும்.

பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலையில் 4-வது மாநிலமாகவும், அவர்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் வன்முறையில் ஏழாவது இடத்திலும் தமிழகம் உள்ளது எனும் தகவல் அம்மக்களுக்கும் இம்மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களில் 8வது இடத்திற்குள் தமிழ்நாடு உள்ளது. இந்தத் தோல்விகளுக்காக மட்டுமாவது, போலீஸ் துறையை தன் நேரடிப் பொறுப்பில் வைத்துள்ள முதல்-அமைச்சர் பழனிசாமி தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்.

சட்டமன்றத்திற்குத் தவறான தகவல் தந்ததற்காக முதல்-அமைச்சர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இந்தக் குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைக்குப் பிறகாவது, அ.தி.மு.க. அமைச்சர்களின் தலையீடு இன்றி முதல்-அமைச்சர் அலுவலகத்தின் ‘அரசியல்’ உத்தரவுகளுக்கு அடிபணியாமல், தமிழக காவல்துறை சுதந்திரமாகச் செயல்படுவதற்கு முதல்-அமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கொலைக்குற்றங்களின் அச்சத்திலிருந்து மக்களை மீட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News