செய்திகள்
மின்கம்பம் முறிந்து கிடக்கும் காட்சி.

வடகிழக்கு பருவமழை - மின் விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்

Published On 2019-10-23 09:56 GMT   |   Update On 2019-10-23 09:56 GMT
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துக்களை தடுக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) ராஜசேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் மழை காரணமாக ஏற்படும் மின் விபத்துக்களை தடுக்க பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகே செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இடி, மின்னலின்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள், கான்கிரீட் கூரையிலான கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாதபட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள்.

இடி, மின்னலின்போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி, செல்போன் மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருக்கக்கூடாது. மின் மாற்றிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் மின்கம்பங்கள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் பொழுது மரக்கிளைகள் மின் கம்பியில் பட்டு இருந்தால் மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மின் கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ? மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது. வீடுகள், மின்கம்பங்கள் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் மின் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரி செய்ய முயற்சிக்கக்கூடாது. மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News