செய்திகள்
கலெக்டர் விஜயலட்சுமி

தீபாவளியை முன்னிட்டு ஆஸ்பத்திரி, கோர்ட்டு, பள்ளிகள் அருகில் பட்டாசு வெடிக்க தடை

Published On 2019-10-23 09:35 GMT   |   Update On 2019-10-23 09:35 GMT
தீபாவளியை முன்னிட்டு மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்றும் மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி கல்வி துறை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு பண்டிகை காலங்களில் ஏற்படும் மாசினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறது.

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசினை குறைக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகித்தல் மற்றும் பட்டாசு உபயோகிக்கும் கால அளவை எடுத்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், உச்சநீதி மன்றத்தின் ஆணைப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்கலாம். திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம். குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வான வெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதை தவிர்க்கவும்.

குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காமல் பெரியவர்கள் உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படுவார்கள்.

தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டுத் தன்மையையும், தொடர்ஓசை நிலையான செவிட்டுத் தன்மையையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே ஒளித்திருநாளான தீபாவளிப் பண்டிகையில் நமது கவனக்குறைவினாலும், அலட்சியத்தினாலும், மாசு மற்றும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டாசினை தவிர்த்து விபத்தில்லா தீபாவளிப் பண்டிகையை அனைவரும் நல்ல முறையில் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News