செய்திகள்
பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 66 பேருக்கு ‘டெங்கு’ காய்ச்சல்

Published On 2019-10-23 08:02 GMT   |   Update On 2019-10-23 08:02 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் 66 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். பொன்னேரி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.
திருவள்ளூர்:

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் மிரட்டி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுபவர்கள் தினந்தோறும் அதிகரித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 66 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

பொன்னேரி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. பெருவாயல், காரனோடை, காட்டுப்பள்ளி, ஆரம்பாக்கம், ஆலாடு, பழவேற்காடு பகுதிகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 32 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஆரணியை சேர்ந்த தினேஷ், கவரப்பேட்டை மோகனவல்லி, பொன்னேரி குமரபிரகாஷ் ஆகியோருக்கு டெங்கு அறிகுறி உள்ளது. அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்தித்து அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தார்.

அப்போது, அமைச்சர் பெஞ்சமின், சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, கூடுதல் இயக்குனர் டாக்டர் வடிவேலன், இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் மாலதி, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உடன் இருந்தனர்.

Tags:    

Similar News