செய்திகள்
சுஷ்மிதா

வேடசந்தூரில் கர்ப்பிணி பெண்ணை கொன்று நகை கொள்ளை

Published On 2019-10-23 06:11 GMT   |   Update On 2019-10-23 06:11 GMT
வேடசந்தூரில் நிறைமாத கர்ப்பிணியை கொன்று நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேடசந்தூர்:

வேடசந்தூர் வசந்தநகரை சேர்ந்தவர் தினேஷ்குமார்(25). இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், சுஷ்மிதா(20) என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுஷ்மிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

பிரசவத்திற்காக கவுண்டச்சிபட்டியில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கிஇருந்தார். இன்று காலை வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை மர்மநபர்கள் தாக்கி கீழே தள்ளினர்.

மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்கசங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். அதை தடுக்க முயன்றபோது சுஷ்மிதாவை தாக்கிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே சுஷ்மிதா இறந்துவிட்டார். வேலைக்கு சென்று திரும்பிய தினேஷ்குமார் தனது மனைவியை தேடிச்சென்றபோது வயலில் காயங்களுடன் இறந்துகிடந்தார்.

இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் ஒன்றுதிரண்டு சுஷ்மிதாவை வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேடசந்தூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. தினேஷ்குமாருக்கு யாருடனாவது முன்விரோதம் உள்ளதா? அல்லது நகைக்காக சுஷ்மிதாவை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சுஷ்மிதாவின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கொலை செய்யப்பட்ட சுஷ்மிதா திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ மணிமாறனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News