செய்திகள்
நகைகடை சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி- 50 பவுன் நகைகள் தப்பின
திண்டுக்கல் அருகே உள்ள அய்யலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் பெட்ரோல் பங்க் அருகே 30 கடைகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் உள்ளது. இதன் ஒரு தளத்தில் ஏ.டி.எம்., தனியார் நகை அடகு கடை, இன்சூரன்ஸ் கம்பெனி ஆகியவை அடுத்தடுத்து உள்ளது. நேற்று இரவு இன்சூரன்ஸ் கம்பெனியின் ஷட்டரை உடைத்து கொள்ளையர் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்து நகை கடைக்குள் துளையிட்டு உள்ளே சென்றனர். ஆனால் அங்கிருந்த லாக்கரை திறக்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த மேஜை மற்றும் பொருட்களை அடித்து சேதப்படுத்தி விட்டு சென்று விட்டனர்.
இன்று காலை கொள்ளை முயற்சி நடந்தது குறித்து நகைக்கடை உரிமையாளரான பாலாஜி என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடகு கடையில் சுமார் 50 பவுன் நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கொள்ளையர் உடைக்க முடியாததால் அது தப்பியது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜகணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளை சம்பவம் போல சுவரில் துளையிட்டு கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அடுத்துள்ள ஏ.கலையம்புத்தூரில் அடுத்துடுத்து 4 வீடுகளில் நேற்று நள்ளிரவு கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். இந்த வீட்டில் வசிப்பவர்கள் வியாபாரம் செய்வதற்காக வெளியே சென்று விட்டனர். வீட்டில் பணம், நகை எதுவும் இல்லை. இதனால் 4 வீடுகளிலும் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இது குறித்து பழனி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.