செய்திகள்
கொலை செய்யப்பட்ட ஷோபனா.

திருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலையில் வாலிபர் சிக்கினார்

Published On 2019-10-21 09:55 GMT   |   Update On 2019-10-21 09:55 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே அழகுநிலைய பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 35). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு பூக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி வனிதா என்ற ஷோபனா (29). இவர் திருச்செங்கோட்டில் தனது கணவரின் சகோதரி நடத்தி வரும் அழகு நிலையத்தை நிர்வகித்து வந்தார். இவர்களுக்கு தேவா (11), சச்சின் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர். தேவா 6-ம் வகுப்பும், சச்சின் எல்.கே. ஜியும் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஷோபனா கடந்த 19-ந் தேதி வேலைக்கு சென்றார். மாலை வரை வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார்.

இதற்கிடையே கணவருக்கு போன் செய்த ஷோபனா தனது மகன் தேவாவின் பிறந்த நாளுக்காக துணி வாங்கிக் கொண்டு வருவதாகவும், ஊருக்கு வரும் கடைசி பஸ்சை விட்டு விட்டதால் தனக்கு தெரிந்த நண்பரின் காரில் வீட்டிற்கு வருவதாகவும் இரவு 9 மணி அளவில் தகவல் தெரிவித்தார்.

ஆனால் நள்ளிரவு வரையும் ஷோபனா வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த செந்தில் மொளசி போலீசில் நேற்று புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் மற்றும் ஷோபனாவின் உறவினர்கள் அவரை தேடினர்.

அப்போது திருச்செங்கோட்டை அடுத்த புள்ளியம் பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு குட்டையில் துப்பட்டாவால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் ஷோபனா பிணமாக கிடந்தார்.

மேலும் அவரது உடல் கிடந்த இடத்தின் அருகே உள்ள மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் ஷோபனா தனது மகனின் பிறந்த நாளிற்காக வாங்கிய துணிகள் மற்றும் சாக்லெட் பாக்கெட்டுகள் சிதறி கிடந்தது. அவரது கைப்பை விட்டம்பாளையம் பகுதியில் சாலையோரமாக கண்டெடுக்கப்பட்டது.

ஷோபனாவின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷோபனா தனது மகன் பிறந்த நாளிற்காக வாங்கிய ஜவுளி மற்றும் சாக்லெட்டுகள் மர வள்ளிக்கிழங்கு தோட்டத்தில் சிதறி கிடந்ததால் அங்கு வைத்து ஷோபனாவை காரில் அழைத்து வந்த மர்மநபர் கற்பழித்து இருக்கலாம் என்றும் அப்போது ஏற்பட்ட தகராறில் ஷோபனாவை கெலை செய்து அவரதுஉடலை அருகில் உள்ள குட்டையில் வீசி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ஷோபனாவை காரில் அழைத்து வந்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஷோபனா வாட்ஸ்-அப்பில் மூழ்கி கிடந்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் யாராவது அவரை அழைத்து சென்று கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் ஷோபனா அணிந்திருந்த நகைகள் அனைத்தும் அப்படியே இருந்ததால் நகைக்காக இந்த கொலை நடக்க வாய்ப்பு இல்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

ஷோபனாவும் செந்திலும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதனால் உறவினர்கள் கொலை செய்தார்களா? அல்லது கள்ளக்காதல் தகராறில் இந்த கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் மொளசி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே ஷோபனாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது செல்போனுக்கு கடைசியாக பேசியது திருச்செங்கோடு அருகே உள்ள துவக்கவாடியைச் சேர்ந்த கணேஷ்குமார் (35) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை பிடித்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது ஷோபனாவின் கொலை குறித்து சில முக்கிய தகவல்களை அவர் கூறியதாக தெரிகிறது.

விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் ஷோபனா வழக்கில் பரபரப்பு நீடித்து வருகிறது.
Tags:    

Similar News