செய்திகள்
கோப்புப்படம்

டிக்கெட் எடுக்க பணம் இல்லை- காதலனுடன் வந்த இளம்பெண்ணை திட்டிய பஸ் கண்டக்டர்

Published On 2019-10-21 06:11 GMT   |   Update On 2019-10-21 06:11 GMT
சென்னையில் காதலனுடன் பஸ்சில் ஏறிய இளம்பெண்ணிடம் டிக்கெட் எடுக்க பணம் இல்லாததால் அவரை கண்டக்டர் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:

‘27 டி’ மாநகர பஸ் நேற்று பட்டினப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கத்துக்கு சென்று கொண்டிருந்தது.

நொச்சிக்குப்பம் வந்த போது 24 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலருடன் அந்த பஸ்சில் ஏறினார். அது டீலக்ஸ் பஸ். இருவரும் உட்கார்ந்தனர்.

உடனே கண்டக்டர் டிக்கெட்டு எடுக்கும்படி கூறினார். அந்த பெண்ணிடம் பணம் இல்லை. காதலனை டிக்கெட் எடுக்கும் படி கூறினார். ஆனால் அவரிடம் 2 பேருக்கும் சேர்த்து டிக்கெட் எடுக்க பணம் இல்லை. 20 ரூபாய் மட்டுமே இருந்தது.

காதலனிடம் பணம் இல்லாததால் அந்த பெண் பஸ்சில் இருந்து கீழே இறங்க விரும்பினார். ஆனால் அதற்குள் தானியங்கி கதவு மூடிக்கொண்டது.

‘பஸ்சை உடனே நிறுத்துங்கள். கதவை திறங்கள் நான் கீழே இறங்க வேண்டும்’ என்று அந்த பெண் டிரைவரிடம் கூறினார். அவருடன் வந்த வாலிபரும் பஸ்சை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், டிரைவர், “ வழியில் நிறுத்த முடியாது. அடுத்த ஸ்டாப்பில் தான் பஸ்சை நிறுத்த முடியும்” என்று கூறிவிட்டார்.

அருகில் இருந்த வாலிபரின் நண்பர்கள் ‘நாங்கள் டிக்கெட் எடுக்கிறோம்’ என்றனர். ஆனால், இளம்பெண், “கீழே இறங்கப் போகிறேன். கதவை திறக்க வேண்டும்” என்றார்.

இதற்குள் அங்கு வந்த கண்டக்டர், “காசு இல்லாமல் ஏன் பஸ்சில் ஏறுகிறாய்? ஆண் நண்பர்களுடன் சுற்றுகிறாய்” என்று மோசமாக திட்டியதாக கூறப்படுகிறது. பஸ் நிற்கும் வரை அந்த பெண்ணை விமர்சனம் செய்து கொண்டே வந்தார். இதை அந்த பஸ்சில் வந்த பயணிகள் செல்போனில் வீடியோவாக எடுத்தனர்.

காசு இல்லாததால் பஸ்சில் இருந்து இறங்கப் போவதாக சொல்லிய பிறகும் பஸ்சை நிறுத்தவில்லை. அந்த பெண்ணை கண்டக்டர் மோசமாக விமர்சனம் செய்தது குறித்து, அந்த பெண்ணும் அவருடன் வந்த வாலிபரும் போன் மூலம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அந்த பஸ் கண்டக்டரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News