செய்திகள்
நாராயணசாமி மீது நடவடிக்கை- கவர்னர் திடீர் உத்தரவு
ஹெல்மெட் அணியாமல் ஸ்கூட்டரில் சென்ற நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கும், கவர்னர் கிரண்பேடிக்கும் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. காமராஜர் நகர் இடைத்தேர்தலில் மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக் கட்டையாக கவர்னர் கிரண்பேடி செயல்படுகிறார். தேர்தல் நன்னடத்தை விதி அமலில் இருக்கும்போது ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். அவர் மீது தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்படும். ஐகோர்ட்டு உத்தரவை மீறி செயல்படும் கவர்னர் கிரண்பேடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காமராஜர் நகர் தொகுதி பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று முதல்- அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் 2 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார். ஹெல்மெட் அணியாமல் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஸ்கூட்டரில் ஊர்வலமாக வந்த படம் பத்திரிகையில் வெளியாகி இருந்தது.
இந்த படத்துடன் கவர்னர் கிரண்பேடி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மோட்டார் வாகன சட்டத்தை மீறும் இச்செயல் வெட்கக்கேடானது. சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகள், சட்டங்கள் மீறப்பட்டுள்ளது. புதுவை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவாவிடம் சட்டத்தின் உத்தரவுகளை மீறியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இதனால் முதல்- அமைச்சர் நாராயணசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்படுமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.