செய்திகள்
கோப்புப்படம்

தீபாவளியை முன்னிட்டு பயணிகளை கவர சொகுசு ஏ.சி. பஸ்கள்

Published On 2019-10-19 07:27 GMT   |   Update On 2019-10-19 07:27 GMT
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகளை கவரும் விதமாக குறைந்த கட்டணத்தில் சொகுசு ஏ.சி. பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பழைய பஸ்கள் படிப்படியாக நீக்கப்பட்டு புதிய பஸ்கள் விடப்படுகின்றன.

பயணிகளை கவரும் வகையில் ஏ.சி.பஸ்கள், படுக்கை வசதி, கழிவறை வசதியுடன் பஸ்கள் இயக்கப்படுகிறது. தனியார் ஆம்னி பஸ்களை போல பயணிகளுக்கு வசதிகளை கொடுத்து ஈர்க்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் புதிய பஸ்கள் விடப்பட்ட பிறகு பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. புதிய பஸ்கள் கட்டுமானப் பணி நிறைவடைந்து படிப்படியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் ஏ.சி. பஸ்கள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு அளிக்கப்பட உள்ளன. அந்த வகையில் கோவை அரசு போக்குவரத்து கழகத்துக்கு 10 ஏ.சி. விரைவு பஸ்கள் அளிக்கப்படுகிறது.

இதில் 3 பஸ்கள் தயாரிக்கப்பட்டு கோவை அரசு போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக ஈரோடு- சென்னை இடையே ஒரு பஸ்சும், கோவை- ராமேசுவரம் இடையே 2 பஸ்களும் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

பயணிகளை கவரும் வகையில் புதிய வகை ஏ.சி. பஸ்களை இயக்கி வருகிறோம். தற்போது 3 பஸ்கள் வந்தடைந்துள்ளன. தீபாவளி பண்டிகைக்குள் மேலும் 7 பஸ்கள் வந்து விடும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த பஸ்சில் இருக்கைகள் 3 பிளஸ் 2 என்ற வகையில் இருக்கும். தற்போதுள்ள ஏ.சி. பஸ்களின் கட்டணத்தை விட இந்த பஸ்களில் கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளது. கட்டணத்தை அரசு நிர்ணயித்து அறிவிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.
Tags:    

Similar News