செய்திகள்
நாங்குநேரி தொகுதி ஏமன்குளத்தில் சரத்குமார் பிரசாரம் செய்தபோது எடுத்தபடம்.

நாங்குநேரி தொகுதி மக்களை புறக்கணித்த காங்கிரசை விரட்டியடியுங்கள்- சரத்குமார்

Published On 2019-10-18 04:36 GMT   |   Update On 2019-10-18 04:37 GMT
நாங்குநேரி தொகுதி மக்களை புறக்கணித்த காங்கிரசை விரட்டியடியுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சரத்குமார் கூறியுள்ளார்.
இட்டமொழி:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.

அவர் நேற்று மாலை நாங்குநேரி ஒன்றியம் கருங்கண்மன் குடியிருப்பு, கண்டிகைபேரி, இளையநயினார்குளம், ஏமன்குளம், மன்னார்புரம், இட்டமொழி, காரியாண்டி, செண்பகராமன்நல்லூர் மற்றும் மூலக்கரைப்பட்டி ஆகிய ஊர்களுக்கு சென்று பிரசாரம் செய்தார்.

நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல் எதற்கு வந்தது என்று உங்களுக்கு தெரியும். சட்டசபைக்கு உங்கள் சார்பில் உழைக்க செல்வேன் என்று கூறிவிட்டு, பாராளுமன்றத்துக்கு செல்ல விரும்பி சென்று விட்டார்.

தற்போது இதே தொகுதியில் அதே காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியூரில் இருந்து ரூபி மனோகரனை வரவழைத்து நிறுத்தி இருக்கிறார்கள். நாங்குநேரி தொகுதி மக்களை புறக்கணித்த காங்கிரசை நீங்கள் விரட்டியடியுங்கள்.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செய்தார். அவரது வழியில் எடப்பாடி பழனிசாமியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி வருகிறார்.

மாபெரும் தலைவி இறந்த பிறகு இரண்டு தலைவர்கள் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக நடத்தி வருகிறார்கள். நல்லாட்சி நடந்து வருகிறது.

காற்றையும் காசாக்கியது தி.மு.க. 2ஜி அலைக்கற்றையில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தது தி.மு.க. இயக்கம். எனவே ஸ்டாலின் சொல்வதை யாரும் கண்டு கொள்ளத்தேவையில்லை. உங்களுக்காக உழைக்க ரெட்டியார்பட்டி நாராயணனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சரத்குமார் இன்று களக்காடு ஒன்றியத்திலும், நாளை (19-ந் தேதி) பாளையங்கோட்டை ஒன்றியத்திலும் பிரசாரம் செய்கிறார்.
Tags:    

Similar News