செய்திகள்
முகமது‌ஷபியை தேனி கோர்ட்டிற்கு போலீசார் அழைத்து வந்த காட்சி.

நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - இர்பானின் தந்தை முகமது‌ ஷபிக்கு 25ந் தேதி வரை காவல் நீட்டிப்பு

Published On 2019-10-16 08:30 GMT   |   Update On 2019-10-16 09:42 GMT
நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் கைதாகி சிறையில் உள்ள இர்பானின் தந்தை முகமது ‌ஷபிக்கு வருகிற 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
தேனி:

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், அவர்களது தந்தையர் வெங்கடேசன், சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் கோர்ட்டில் சரணடைந்த மாணவர் இர்பான் மற்றும் அவரது தந்தை முகமது‌ஷபியும் கைது செய்யப்பட்டனர். மேலும் சென்னையை சேர்ந்த மாணவி பிரியங்கா அவரது தாய் மைனாவதியும் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள புரோக்கர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களது தந்தை சரவணன், டேவிஸ் ஆகியோர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை தேனி கோர்ட்டு தள்ளுபடி செய்தது. மாணவர் இர்பானுக்கும், வருகிற 25-ந்தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டது. சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசன், முகமது‌ஷபி ஆகியோரது ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணைக்கு வர இருந்தது.



டாக்டர் வெங்கடேசன் ஜாமீன்மனுவை நேற்று மதுரை ஐகோர்ட்டு கிளை தள்ளுபடி செய்து, இவ்வழக்கை மதுரை நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது. இதனால் முகமது‌ஷபி மட்டும் இன்று தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக ஆஜரான வக்கீல்கள் நீட் முறைகேடு வழக்கில் முகமது‌ஷபி எந்தவித குற்றமும் செய்யவில்லை என்றும், அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்காததால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

ஆனால் இதற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். முகமது‌ஷபியின் மகன் இர்பான் தர்மபுரி மற்றும் மொரிசியஸ் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் படித்து வந்ததற்கான ஆதாரம் உள்ளது. மேலும் முகமது‌ஷபியும் எம்.பி.பி.எஸ் படிக்காமலேயே தான் ஒரு டாக்டர் என கூறிக்கொண்டு வாணியம்பாடியில் 2 கிளினிக்குகள் நடத்தி வந்துள்ளார். தற்போது உண்மை வெளிவந்த பின் அந்த கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் புரோக்கர் முகமதுரசீத்துடன், ‌ஷபி மட்டுமே நேரடி தொடர்பில் இருந்துள்ளார். அவருக்கு பணம் கொடுக்கல் வாங்கலிலும் உதவி செய்துள்ளார். தற்போது முகமதுரசீத் எங்கு உள்ளார் என தெரியாத நிலையில் முகமது‌ஷபியை வெளியே விட்டால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என்று தெரிவித்தனர். இதனையடுத்து முகமது ‌ஷபிக்கு வருகிற 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானதால் பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரும் இன்று தேனி ஜே.எம்.கோர்ட்டில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தனர்.
Tags:    

Similar News