கவர்னர் மீது பழிபோடுவதை நாராயணசாமி வாடிக்கையாக வைத்துள்ளார்- ரங்கசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி:
காமராஜ்நகர் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து ரெயின்போ நகரில் இன்று ரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ரெயின்போ நகர் 9-வது குறுக்குத்தெருவில் தொடங்கி வீடு, வீடாக ரங்கசாமி சென்று வாக்கு சேகரித்தார்.
அவருடன் அ.தி.மு.க மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் கவுன்சிலர் சாரம் கணேசன், அ.தி.மு.க. மகளிரணி தலைவி விஜயலட்சுமி, முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் கட்சியினர் பிரசாரத் தில் ஈடுபட்டனர்.
பிரசாரத்தின்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
கவர்னருக்கான அதிகாரம் என்ன? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கான அதிகாரம் என்ன? என்பது மத்திய மந்திரியாக இருந்த நாராயணசாமிக்கு நன்றாகவே தெரியும். தங்களின் இயலாமையை, செயல்படாத தன்மையை கவர்னர் மீதும், எதிர்கட்சியினர் மீதும் பழியாக சொல்கிறார். இதற்கு கவர்னரை ஒரு கருவியாக நாராயணசாமி பயன்படுத்துகிறார். நாள்தோறும் கவர்னர் மீது குற்றம்சாட்டினால் அதை மக்கள் எப்படி ஒத்துக் கொள்வார்கள்?
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம் 2015-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போது இத்தொகுதியை பார்வையிட வில்லை என வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளாரே? என கேட்டபோது,
எப்போது வெள்ள சேதம் ஏற்பட்டாலும் அனைத்து பகுதிகளிலும் நான் சென்று பார்வையிடுவது வழக்கம். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் நான் இத்தொகுதியை பார்வையிட்டேன் என தெரிவித்தார்.