புத்தகப்பையை மறைத்து வைத்ததால் தகராறு: 9-ம் வகுப்பு மாணவனை பிளேடால் கீறிய சக மாணவர்
மதுரை:
மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் உள்ள மறவன்பட்டி காலனியைச் சேர்ந்த ராமு மகன் சரவணக்குமார் (வயது14). அலங்காநல்லூரை அடுத்த பாலமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவனது நண்பர் மோகன்ராஜ்.
வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது மோகன்ராஜ் புத்தகப்பையை அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் எடுத்து மறைத்து வைத்ததாக தெரிகிறது.
இதனை சரவணக்குமார் தட்டிக்கேட்டார். இதைத் தொடர்ந்து சரவணக் குமாருக்கும், அந்த மாணவருக்கும் தகராறு ஏற்பட்டது. பள்ளி முடிந்ததும் சரவணக்குமர் வீட்டுக்கு புறப்பட்டார். பஸ் நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்த அவரை வழி மறித்து முதுகில் பிளேடால் கீறியதாக தெரிகிறது.
வலியில் அலறித்துடித்த சரவணக்குமாரை ஆசிரியர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பிளேடால் கீறிய மாணவன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடை பெறுகிறது.