செய்திகள்
கொலை

சேலத்தில் பெரியப்பாவை அடித்து கொன்ற சிறுவன்

Published On 2019-10-14 05:01 GMT   |   Update On 2019-10-14 05:01 GMT
சேலத்தில் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெரியப்பாவை 15 வயது சிறுவன் அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:

சேலம் ஜாகீர்ரெட்டிப்பட்டி மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பத்மபிரியா (34). இவர்களுக்கு நந்தினி, நித்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக சரவணன் மனைவியை பிரிந்து அந்த பகுதியில் தனியாக வசித்து வந்தார். இவரது தம்பி முருகேசன் (36). இவருக்கும் சரவணனுக்கும் கடந்த 1 மாதத்திற்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அப்போது முருகேசன் சரவணனை தாக்கினார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சரவணன் நேற்று மது அருந்தினார். அப்போது முருகேசனின் 15 வயது மகனிடம் நீ ஒரு தாய்க்கு பிறந்தவன் என்றால் என்னை அடித்துப்பார் என்று கூறினார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி பின்னர் கைகலப்பாக மாறியது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த சிறுவன் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சரவணனின் தலை மற்றும் முகத்தில் சரமாரியாக அடித்தார். இதில் மயங்கி விழுந்த சரவணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். இதைப் பார்த்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசேதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விசாரணை முடிவில் அவரை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கைதான சிறுவனின் தாய் ஜீவா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் முருகேசனை பிரிந்து தனது இளைய மகன் கோகுலகிருஷ்ணனுடன் கரூரில் வசித்து வருகிறார். கொலையாளியான சிறுவன் மட்டும் தந்தை முருகேசனுடன் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News