செய்திகள்
திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணி பெண் உள்பட 23 பேருக்கு டெங்கு காய்ச்சல்
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 122 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது.
திருவள்ளூர்:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.
திருப்பதி அருகே உள்ள தெக்களூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவியோ கேஷ்வரி, வாலாஜாபாத்தை அடுத்த பழைய சீவிரம் பெரிய காலனியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் பிரவீண்குமார் ஆகியோர் மர்ம காய்ச்சலால் அடுத் தடுத்து உயிரிழந்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் பாதிப்பு காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் தினந்தோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக 122 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்தத்தை பரிசோதனை செய்ததில் கர்ப்பிணி பெண் உட்பட 23 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் உரிய கண்காணிப்பில் உள்ளார்களா? என்று நள்ளிரவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை இயக்குனர் சுவாதி ரத்னாவதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட உள்நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் தயாளன், மருத்து வமனை கண்காணிப்பாளர் சேகர் உடனிருந்தனர்.