செய்திகள்
முருகன்

கொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து

Published On 2019-10-12 09:58 GMT   |   Update On 2019-10-12 09:58 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
திருச்சி:

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகளை காந்தி ஜெயந்தி அன்று கூட்டாளிகளுடன் கொள்ளையடித்த பிரபல திருவாரூர் கொள்ளையன் முருகனை திருச்சி தனிப்படை போலீசார் துரத்தியதால் வேறு வழியின்றி பெங்களூர் கோர்ட்டில் நீதிபதி நாகம்மா முன்பு சரண் அடைந்தார்.

அவரை பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் 14 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து திருவாரூர் முருகன் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த வழக்கில் ஏற்கனவே கடந்த 10ந்தேதி செங்கம் கோர்ட்டில் சரண் அடைந்த திருவாரூர் முருகனின் கூட்டாளி சுரேஷ் மற்றும் முதலில் கைது செய்யப்பட்ட சீராதோப்பு மணிகண்டன், சுரேசின் தாய் கனகவள்ளி, தந்தை குணசேகரன், மாமா மகன் முரளி ஆகியோர் ஏற்கனவே திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் இதுவரை ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள் மட்டுமே போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. மற்ற நகைகள் முருகனிடம் இருப்பதாக கூறப்பட்டது. சுமார் ரூ.8 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை முருகன் எங்கு பதுக்கி வைத்துள்ளான் என்பதை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை தெரியும்.

ஏற்கனவே முருகனின் கூட்டாளி சுரேசை போலீஸ் காவலில் 10 நாட்கள் எடுத்து விசாரிக்க திருச்சி கோர்ட்டில் தனிப்படை போலீசார் மனு செய்துள்ளனர். முருகனையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெங்களூர் கோர்ட்டில் போலீசார் திங்கட்கிழமை மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதற்கிடையே போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தாலும் முருகனிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதும் மீட்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் இதுவரை 50க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய முருகனிடமிருந்து ஒரு சில வழக்குகளில் மட்டுமே கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.



கொள்ளையன் முருகனிடம் விசாரித்து உண்மையை வரவழைப்பது என்பது கல்லில் இருந்து நார் உரிப்பதற்கு சமம் என்று போலீசார் கூறுகிறார்கள். ஏற்கனவே 2015ம் ஆண்டு பெங்களூரில் தொழில் அதிபர் வீட்டில் திருவாரூர் முருகன் கொள்ளையடித்த ரூ.3.16 கோடி நகைகளை மீட்பதற்காக அவனை 90 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து பெங்களூர் போலீசார் விசாரிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது.

அந்த அளவிற்கு முருகனிடமிருந்து உண்மையை வரவழைப்பது சிரமம். ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என சுற்றி சுற்றி கொள்ளையடித்த முருகன் போலீசாரிடம் கொள்ளையடித்த பணம், நகை எங்கே என்று கேட்டால் அதற்கு செலவு கணக்கு காட்டுவதற்காகவே சினிமா படங்களை தயாரித்துள்ளான்.

முருகன் கொள்ளையடித்த சம்பவங்கள் அனைத்தும் பல கோடி மதிப்புள்ள வங்கி, நகைக்கடை மற்றும் கோடீஸ்வர தொழில் அதிபர்கள் வீடுகள் போன்ற இடங்கள் தான். கடந்த 15 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களை நடத்திய கொள்ளையன் முருகன் கடந்த ஜனவரி மாதம் சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.5 கோடி நகை, பணம் கொள்ளை வழக்கிலும் தொடர்புடையவன் என தெரியவந்துள்ளது.

இதுவரை கொள்ளையடித்த பணம் நகை மட்டும் ரூ.100 கோடி மதிப்பு இருக்கும் என்று போலீசார் கூறுகிறார்கள். இவற்றில் பெரும்பாலான பணத்தை சினிமாவில் முதலீடு செய்ததாக முருகன் கூறினாலும் பல சொத்துக்களை தனது உறவினர்கள் பெயரிலும், பினாமி பெயரிலும் முருகன் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திரா திரையுலகிலும், சிறிய படங்களை எடுக்கும் பிரமுகர்களுக்கு முருகன் பைனான்ஸ் செய்த தகவலும் தெரிய வந்துள்ளது. நடிகைகள், துணை நடிகைகள் என பணத்தை தண்ணீராக செலவு செய்ததாக போலீசாரால் கூறப்படும் முருகனின் சுமார் ரூ.100 கோடி சொத்துகள் யார்? யாரிடம் உள்ளது என்பது திருச்சி தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கும் போது தெரியவரும்.

முருகன் 2 சொகுசு கார்களில் சுற்றி வந்துள்ளான். அந்த கார்கள் தற்போது யாரிடம் உள்ளது. லலிதா ஜூவல்லரி நகைகளும் எங்கு உள்ளது. சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி லாக்கர் நகை, பணம் எங்கு உள்ளது என்ற தகவலும் அப்போது தெரியவரும்.

ஏற்கனவே முருகனின் மனைவிகள் மற்றும் உறவினர்களிடம் ஏற்கனவே நடத்திய விசாரணையில் தனிப்படை போலீசார் சில தகவல்களை திரட்டியுள்ளனர். முருகனை விசாரிக்கும்போது மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.



Tags:    

Similar News