செய்திகள்
ஜிகே வாசன்

மோடி-சீன அதிபர் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுவது தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும்: ஜி.கே.வாசன்

Published On 2019-10-10 07:35 GMT   |   Update On 2019-10-10 07:35 GMT
சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை சென்னை வருவது தமிழர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசு முறை பயணமாக நாளை சென்னை வருவது தமிழர்கள் உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியளிக்கிறது.

குறிப்பாக சீன அதிபர் சென்னைக்கு அருகில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க மாமல்லபுரத்திற்கு வந்து இந்தியப் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து இரு நாட்டிற்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக பேச்சுவார்த்தை நடத்துவது பாராட்டுக்குரியது.

இந்திய மக்கள் அனைவரும் இந்த சந்திப்பை மிகுந்த ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்ற இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமையும்.

இந்தியா-சீனா இடையே அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், எல்லை, பிராந்திய அமைதி உள்ளிட்ட பலவற்றில் ஒத்த கருத்து ஏற்பட்டு இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்க வேண்டும், பயன் தர வேண்டும், பலன் அளிக்க வேண்டும் என்பது தான் இந்திய மக்களின் எதிர்பார்ப்பாகும்.

பிரதமர் மோடி நமது நாட்டிற்கும் சீனாவிற்கும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பது இரு நாடுகளுக்கும் பெரும் பயன் தரும். எனவே தமிழகத்திற்கு வருகை புரிந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ள சீன அதிபருக்கும், பிரதமர் மோடிக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News