செய்திகள்
கைது

ஆண்டிப்பட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு- தலைமை ஆசிரியர் கைது

Published On 2019-10-09 04:22 GMT   |   Update On 2019-10-09 04:22 GMT
ஆண்டிப்பட்டி அருகே மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவாக இருந்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை ஒன்றியம் காமன் கல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாக கடந்த 2015-ம் ஆண்டு பெற்றோர்கள் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்திலும், கல்வித்துறை அதிகாரிகளிடமும் புகார் அளித்தனர்.

மாணவிகளிடம் விசாரணை நடத்தியதில் ரவிச்சந்திரன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதனையடுத்து அவரை உத்தமபாளையம் ஒன்றியத்துக்கு மாறுதல் செய்தனர். அதன் பின்னர் மீண்டும் காமன் கல்லூர் பள்ளிக்கே நியமிக்கப்பட்டார்.

இதனால் மாணவிகளும், பெற்றோர்களும் அவரை பள்ளியில் இருந்து நீக்க கோரி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ரவிச்சந்திரன் தலைமறைவானார்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து ரவிச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டனர்.

அதன்படி ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் ரவிச்சந்திரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ரவிச்சந்திரனை இன்ஸ்பெக்டர் உஷாதேவி கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags:    

Similar News