செய்திகள்
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணம்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம்-வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2019-10-08 07:32 GMT   |   Update On 2019-10-08 07:32 GMT
திருச்சி விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு தனியார் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆவணங்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத் என்பவரின் உடைமைகளை சோதனை செய்த போது, அவர் இந்திய மதிப்பில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலர், யூரோ உள்ளிட்ட வெளிநாட்டு பணத்தை மறைத்து வைத்து கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், ஆசாத்திடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இளையான்குடியை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் உடைமைகளுக்குள் ரூ.15 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் மற்றும் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் மதிப்புள்ள 8 லேப்டாப்கள், 300 பிளாஸ்டிக் வாட்ச்சுகள் ஆகியவற்றை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அப்துல்ரகுமானிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியும் கூட, கடத்தல் சம்பவம் குறையவில்லை.

தினமும் பயணிகள் சிலர் தங்கம், வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்து சோதனையில் சிக்குகின்றனர். எனவே முன்பு நடத்தியது போன்று சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கம் கடத்தல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News