செய்திகள்
முக ஸ்டாலின்

20 சதவீத ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவோம்- மு.க.ஸ்டாலின்

Published On 2019-10-08 06:53 GMT   |   Update On 2019-10-08 06:53 GMT
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவோம் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது.

வன்னிய சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கருணாநிதிதான்.

இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் அப்போது ரத்து செய்தார்.

முதன் முதலில் ராஜ்மோகன் என்ற வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ், அதிகாரியை, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக நியமித்தார்.

1996ல் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்தார்.

அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை, இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ‘பென்‌ஷன்’அறிவித்தார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப் போர்த் தியாகிகளுக்கு இணையாக அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தின் விளைவாக, இன்றுவரை அந்தக் குடும்பங்களுக்கு பென்‌ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு கிண்டி ஹால்டா சந்திப்பில் முழு உருவச்சிலை அமைத்து, அதனைத் திறந்து வைத்தவர் கருணாநிதி என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

வன்னியரான திண்டிவனம் வெங்கட் ராமனை கேபினட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சராக்கியதுடன் முதலமைச்சர் அலுவலகத்தில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ். முதல்வரின் செயலாளராக நியமித்து பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் அமர வைக்கப்பட்டார்.

புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொற்கோ நியமிக்கப்பட்டார். வன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்க கழக ஆட்சியில்தான், “வன்னியர் நல வாரியம்” அமைக்கப்பட்டு அதற்கு அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் முதல் தலைவராகவும், பிறகு சந்தானம் இரண்டாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.

கலைஞர் ஆட்சியில், வன்னியர் சமுதாயத்திற்கான இன்னும் எத்தனையோ சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும்.

ஆனால், இந்த 8 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், அப்படி, வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என, ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.

அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவிகொடுத்தேனும் கேட்டதா? இல்லவே இல்லை. ஆனால் இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணிமண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், அண்ணா அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கலைஞர் அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து தி.மு.க. அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News