செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சேலத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்- முதலமைச்சர் பழனிசாமி மனுக்கள் வாங்கினார்

Published On 2019-09-28 05:52 GMT   |   Update On 2019-09-28 05:52 GMT
சேலத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
சேலம்:

சேலம் மாவட்டத்தில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு சேலம் வந்தார்.

சேலம் நெய்க்காரப்பட்டி பொன்னாக்கவுண்டர் மண்டபத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் வீரபாண்டி தொகுதிக்குட்பட்ட மக்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுக்கள் வாங்கினார். முதியோர் உதவி தொகை, கல்வி உதவி தொகை, பட்டா மாறுதல் உள்பட ஏராளமான மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.

பின்னர் சங்ககிரியில் பி.ஆர்.எம்.திருமண மண்டபத்தில் நடந்த முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அந்த தொகுதிக்குட்பட்ட மக்களிடம் மனுக்கள் பெற்றார்.

பிற்பகல் 3 மணியளவில் கொங்கணாபுரம் அருகே உள்ள கச்சப்பள்ளியில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் மற்றும் புதிய வணிக வளாகத்தையும் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். 137 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

நாளை (29-ந் தேதி) காலை 9 மணிக்கு மேட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 11 மணிக்கு ஓமலூரில் நடராஜ செட்டியார் திருமண மண்டபத்திலும் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்.

நாளை பிற்பகல் 3 மணியளவில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு திருமண உதவி தொகை, தாலிக்கு தங்கம் வழங்கும் விழா, அங்கன்வாடி பணியாளர்களுக்கு செல்போன் வழங்கும் விழா புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. இதையொட்டி சேலம் மநாகர் மற்றும் புறநகரில் 1000-த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

முன்னதாக நேற்றிரவு சேலத்திற்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News