செய்திகள்
கைதான மோகன்ராஜ்.

பெண்களை மிரட்டி கற்பழிப்பு- ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

Published On 2019-09-27 04:44 GMT   |   Update On 2019-09-27 04:59 GMT
சேலம் அருகே கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி கற்பழித்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தை அடுத்த செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 42).

ஆட்டோ டிரைவரான இவர் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவரை ஹோமோசெக்சுக்கு அழைத்ததாக மகுடஞ்சாவடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவரது செல்போனை ஆய்வு செய்த போது பல பெண்களை மிரட்டி மோகன்ராஜ் பலாத்காரம் செய்ததும், அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்ததும் தெரிய வந்தது.

இதற்கிடையே 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக மோகன்ராஜ் பலாத்காரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது, தனது ஆட்டோவில் பயணித்த அந்த பெண்ணை பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று மிரட்டி பலவந்தமாக கற்பழித்தது தெரிய வந்தது.

மேலும் இது போல கல்லூரி மாணவி உள்பட 7 பெண்களை மிரட்டி பலவந்தமாக பலாத்காரம் செய்த வீடியோக்களும் அவரது செல்போனில் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தகவல் அறிந்த சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாகானிகேர் சம்பவம் குறித்து சங்ககிரி டி.எஸ்.பி. விசாரிக்க உத்தரவிட்டார். டி.எஸ்.பி. தங்கவேல், மோகன் ராஜ் வீடு மற்றும் அவர் ஆட்டோ நிறுத்தியிருந்த பகுதியிலும் நேற்று மாலை விசாரணை நடத்தினர். அப்போது மோகன்ராஜ் அரசியல் பின்புலத்துடன் அந்த பகுதியில் வலம் வந்ததும், பெண்களை மிரட்டி பலவந்தமாக கற்பழித்தது குறித்தும் அந்த பகுதியினர் சிலர் புகார் தெரிவித்தனர்.

மேலும் மோகன்ராஜின் நண்பரான ஆட்டோ டிரைவர் ஒருவர் காகாபாளையம் மற்றும் சேலம் கொண்டலாம்பட்டியில் பல பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அந்த பெண்களை மோகன்ராஜிக்கு விருந்தாக்கியதுடன் தானும் அந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது.

இது தவிர பள்ளிக்கு செல்லும் மாணவிகளை பள்ளிக்கு செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி ஆட்டோவில் மோகன்ராஜிம் அவரது நண்பரும் ஏற்காடுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அங்கு பல்வேறு இடங்களை சுற்றி காண்பிப்பது போல அழைத்து சென்று அவர்கள் கேட்பதை வாங்கி கொடுப்பதுடன் அவர்களுடன் நெருக்கமாக இருந்துள்ளனர். பின்னர் மாலையில் பள்ளி விடும் நேரத்திற்கு மாணவிகளை பள்ளிக்கூடம் அருகே கொண்டு விடுவதும் தெரிய வந்ததால் தொடர்புடைய மாணவிகளின் பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் தற்போது மேலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோகன்ராஜ் பெண்களை பலாத்காரம் செய்த இடம் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் அந்த வழக்குகளை கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு மாற்ற உள்ளனர். வழக்கை பலப்படுத்த மோகன்ராஜிவுடன் வீடியோவில் இருக்கும் பெண்களை போலீசார் தேடி வருவதுடன் அவர்களது பட்டியலையும் தயாரித்து வருகிறார்கள்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்த பெண்ணும் தனது மகன் மற்றும் மகளுடன் மாயமாகி விட்டார். பலாத்கார சம்பவத்தில் மோகன்ராஜிக்கு உதவிய அவரது நண்பரும் தற்போது மாயமாகி விட்டார். அவர்களை பிடித்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

மேலும் சிறையில் அடைக்கப்பட்ட மோகன்ராஜை காவலில் எடுத்து விசாரித்தால் கூடுதல் தகவல் கிடைக்கும் என்பதால் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News