செய்திகள்
எஸ்தர்

சேலம் அழகாபுரத்தில் அழகு நிலைய பெண் ஊழியர் மர்ம மரணம்

Published On 2019-09-23 11:16 GMT   |   Update On 2019-09-23 11:16 GMT
சேலம் அழகாபுரத்தில் அழகு நிலைய பெண் ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம்:

சேலம் அழகாபுரம் பகுதியில் ஏராளமான அழகு நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் அத்வைத ஆஸ்ரம ரோட்டில் உள்ள ஒரு பெண்கள் அழகு நிலையத்தில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த எஸ்தர் (வயது 28) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு இவர் தனது சக ஊழியர்கள் 3 பேருடன் சேர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்டார். பின்னர் அவர் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் எஸ்தர் மயக்கம் போட்டு விழுந்தார். இதனை யாரும் பார்க்காத நிலையில் இன்று காலை வெகு நேரமாகியும் அவர் எழும்பவில்லை.

சக ஊழியர்கள் அவரை எழுப்பிய போது அவர் அசைவற்ற நிலையில் மூச்சு பேச்சற்ற நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டாதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக ஊழியர்கள் என்ன செய்வதென்று திகைத்தனர். இறந்து போன எஸ்தர் மது போதையில் இறந்தாரா? அல்லது நூடுல்ஸ்சில் வி‌ஷம் கலந்து சாப்பிட்டாரா? அல்லது அந்த உணவு வி‌ஷமாக மாறியதா? என்பது மர்மமாக நீடித்து வருகிறது.

இதுதொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து அழகு நிலைய உரிமையாளர் சாஜினா மற்றும் பெண் ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் அந்த அழகு நிலையத்தில் போலீசார் சோதனை செய்த போது வெளிநாட்டு மது பொருட்கள் அதிக அளவில் அங்கு இருந்ததாகவும், அதனை போலீசார் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது . மருத்துவ பரிசோதனை முடிவில் தான் எஸ்தர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News