செய்திகள்
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

சென்னையில் விரைவில் 50 ஏ.சி. பஸ்கள் இயக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2019-09-21 07:53 GMT   |   Update On 2019-09-21 09:25 GMT
சென்னையில் 50 ஏ.சி. பஸ்கள் மிக விரைவில் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற பணியாளர்கள் 892 பேருக்கு பணி ஓய்வு பணப்பலன்கள் வழங்கும் விழா கரூரில் நடந்தது. இதில் 892 பேருக்கு ரூ.219.80 கோடி மதிப்பிலான பணப்பலன் காசோலைகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ரூ.5ஆயிரத்து 200கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையில்தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது ஆனால் இப்போது எடுக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளால் தமிழகத்தில் ஓராண்டில் 24 சதவீத உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது.

மிக விரைவில் சென்னையில் 50 ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட உள்ளது. குறைவான தூரம் செல்லக்கூடிய பஸ்களும் விரைவில் ஏ.சி. பஸ்களாக இயக்கப்பட உள்ளது. சுற்றுப்புற சூழல் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வகையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த கே.எப்.டபிள்யூ. என்ற வங்கியின் மூலம் மிகக்குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி பெற்று 2 ஆயிரம் மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 820 மின்சார பஸ்கள் ஓராண்டிற்குள் தமிழகத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.



சென்னையில் குறுகலாக உள்ள சாலைகளிலும் பஸ் சேவை இருக்க வேண்டும் என்ற வகையில் மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த திட்டத்தை விரைவில் மதுரை மற்றும் கோவை ஆகிய மாநகரங்களிலும் விரிவுப்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.


Tags:    

Similar News