செய்திகள்
விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி நொறுங்கி இருப்பதை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சி அருகே விபத்து- 2 பேர் பலி

Published On 2019-09-19 06:17 GMT   |   Update On 2019-09-19 06:17 GMT
கள்ளக்குறிச்சி அருகே நள்ளிரவில் காரும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள களஞ்சியம் பகுதியை சேர்ந்தவர்கள் ரங்கசாமி (வயது 58), முருகன் (50).

இவர்கள் கோபி செட்டிப்பாளையத்திலிருந்து சென்னைக்கு ஒரு காரில் நேற்று இரவு புறப்பட்டனர். காரை கோபி செட்டிப்பாளையத்தை சேர்ந்த சாமிநாதன் (37) ஓட்டி சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள ஏமப்பேர் மேம்பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று சென்றது. கண் இமைக்கும் நேரத்தில் மினி லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரில் இருந்த ரங்கசாமி, முருகன் ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சாமிநாதன் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விபத்தில் காயம் அடைந்த கார் டிரைவர் சாமிநாதனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News