செய்திகள்
தினேஷ்குமார்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

Published On 2019-09-17 10:50 GMT   |   Update On 2019-09-17 10:50 GMT
மேட்டுப்பாளையத்தில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

கோவை:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மேத்தேபாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 22). இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந் தேதி மாலை 6 மணியளவில் உறவினர் ஒருவர் தோட்டத்தில் வைத்து தனது செல்போனில் ஆபாச படம் பார்த்து கொண்டு இருந்தார்.

தினேஷ்குமார் ஆபாச படம் பார்ப்பததை அங்கு வந்த 16 வயது சிறுமி பார்த்தார். சிறுமி தினேஷ்குமாருக்கு தங்கை முறையாகும். தினேஷ்குமார் ஆபாச படம் பார்த்ததை சிறுமி உறவினர்களிடம் சொல்லப்போவதாக கூறினார். அப்போது தினேஷ்குமார் சிறுமியிடம் ஆபாச படத்தை காட்டி உறவுக்கு அழைத்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி உடனடியாக அங்கு இருந்து தப்பிச் செல்ல முயன்றார்.

ஆனால் தினேஷ்குமார் சிறுமியை மடக்கி பிடித்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் சிறுமியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். சிறுமி இறந்ததை உறுதி செய்த தினேஷ்குமார் அங்கு இருந்து தப்பிச் சென்றார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த தினேஷ்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. 2 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் தீர்ப்பு நேற்று கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்காக ஒரு ஆயுள் தண்டனையும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தடயத்தை அழித்தற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

பின்னர் போலீசார் தினேஷ்குமாரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News