செய்திகள்
ஆரணி அடுத்த விண்ணமங்கலம் செய்யாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

பலத்த மழை - குப்பநத்தம் அணை நிரம்பி வருகிறது

Published On 2019-09-17 05:42 GMT   |   Update On 2019-09-17 05:42 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்ததால் குப்பநத்தம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 32.1 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 38.5 அடியாக உயர்ந்துள்ளது.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் தாலுகாவில் உள்ள குப்பநத்தம் அணை செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணைக்கு அடுத்தபடியாக பெரிய அணையாக குப்பநத்தம் அணை உள்ளது. 59.4 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கு தற்போது நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. ஜவ்வாது மலையில் கடந்த 4 நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக நேற்று 136 கனஅடி தண்ணீர் வந்தது.

இதனால் நேற்று 32.1 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 38.5 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று இரவு தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு 832 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இன்னும் 21 அடி நீர்மட்டம் உயர்ந்தால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் செங்கம் கலசபாக்கம் தாலுகாவில் உள்ள 9728 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



Tags:    

Similar News