செய்திகள்
நாகையில் பெய்த கனமழையால் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடப்பதை படத்தில் காணலாம்.

டெல்டா மாவட்டங்களில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2019-09-17 04:01 GMT   |   Update On 2019-09-17 04:01 GMT
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இரவு முழுவதும் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர்:

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பல இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக தஞ்சையில் இரவு 7 மணி முதல் 11 மணி வரை மழை பெய்தது. இடை இடையே லேசான மழை பெய்தது.

இந்த மழையில் சாலையோரங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், நடந்து சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இதேபோல் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், மதுக்கூர், திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடந்தது.

நாகை-திருவாரூர் மாவட்டங்களில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலையிலும் நாகையில் லேசான தூறல் பெய்தது.

இரவு பெய்த மழையால் நாகை புதிய பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கி கிடந்தது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதேபோல் சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, குடவாசல், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. மேலும் காற்றும் வீசியதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் இன்று காலை 8 மணி நிலவரப்படி பெய்துள்ள மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு:-

பூதலூர்-126.80

கும்பகோணம்-38.40

தஞ்சாவூர்-25

பேராவூரணி-12.60

ஒரத்தநாடு-5.60

திருப்பூண்டி-27.20

தலைஞாயிறு-14.40

வலங்கைமான்-41.2

குடவாசல்-38.4

திருத்துறைப்பூண்டி-13.4

முத்துப்பேட்டை-12 .

Tags:    

Similar News