செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் காட்சி.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2019-09-13 03:59 GMT   |   Update On 2019-09-13 03:59 GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று காலை 57 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
ஒகேனக்கல்:

கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த மாதம் 3 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 90 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது.

நேற்று முன்தினம் 2 அணைகளில் இருந்தும் நீர்திறப்பு 21 ஆயிரத்து 725 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 14 ஆயிரத்து 225 கனஅடியும், கபிணி அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் 24 ஆயிரத்து 225 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

நேற்று காலை 6 மணிக்கு ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து இரவு 8 மணிக்கு 37 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்று காலை 8 மணிக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மெயின் அருவி, ஐவர்பாணி அருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளில் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 9-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. .

இன்று 37-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது.

நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து உள்ளனர். ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது.

பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் கலைஞர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், மீன் வியாபாரிகள் ஆகியோர் வருமானம் இல்லாமல் தவிக்கிறார்கள். ஒகேனக்கல் வியாபாரிகளும் கடைகளில் வியாபாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
Tags:    

Similar News