செய்திகள்
தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கலைகளின் சங்கம திருவிழாவை பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தபோது எடுத்தப்படம்

தமிழ்மொழியைப் போல் இனிமையான மொழி வேறு இல்லை- கவர்னர் பேச்சு

Published On 2019-09-11 10:50 GMT   |   Update On 2019-09-11 10:50 GMT
தமிழ் மொழியைப் போல் இனிமையான மொழி வேறு இல்லை என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியுள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையம், டெல்லி சங்கீத நாடக அகாடமி சார்பில் தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் கலைகளின் சங்கம திருவிழா 5 நாட்கள் நடக்கிறது. இதன் தென்னக பண்பாட்டு மைய இயக்குளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

கலைஞர்கள் நாட்டின் அளப்பறிய கலைகள் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். இந்த மாதிரியான விழாக்கள் நாட்டின் பல்வேறு கலைகளை போற்றி பாதுகாக்கும் கலைஞர்களுக்கும், மக்களுக்கும் இடையேயான நெருக்கத்தை ஏற்படுத்தும் இளம் கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவும், மெருக்கூட்டி கொள்வதற்கும் இந்த விழாக்கள் மேடையாக உள்ளது. தஞ்சையை கலைகளின் பொக்கிஷமாகவும், பெரிய கோவில் தட்சிணமேரூ என்றும் அழைப்பது வியப்புக்குரிய ஒன்றும் அல்ல.

ஏனென்றால் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட கலைகளின் நுணுக்கங்களை தமிழர்கள் அறிந்து இருந்ததற்கான சான்றாக சோழர்கள் கட்டிய இந்த வரலாற்று சின்னம் நிமிர்ந்து நிற்கிறது. சோழர்கள் காலத்துக்கு பிறகு இப்பகுதியில் தழை தோங்கியது.

தமிழகத்தின் நாட்டுப்புற கலைகள் மற்றும் தமிழ் இசை குறித்த குறிப்புகள் சங்க கால இலக்கியங்களில் பரவலாக கிடைக்கிறது. 6-ம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டு வரை தெய்வீக தமிழ் இசை தமிழகத்தில் தழைத்தோங்கியது. தமிழ் மொழி போல் இனிமையான மொழி வேறு இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை தொடர்ந்து பல் வேறு மாநிலங்களின் பாரம்பரிய இசை நிகழ்ச் சிகள் நடைபெற்றது. வரும் 14-ந் தேதி வரை காலையில் கருத்தரங்கம், மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் பாரம்பரிய இசை, நடகம், தேர்பாவை கூத்து, மலைவாழ் மக்களின் நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள நடக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநில கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியில் சங்கீத நாடக அகாடமி தலைவர் சேகர் சென், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News