செய்திகள்
தண்டராம்பட்டு அருகே பணத்தை திருப்பி கேட்டதால் பெண் அடித்துக்கொலை- கள்ளக்காதலன் கைது
தண்டராம்பட்டு அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள கீழ்சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டுரங்கன். அவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 54). இவர், கடந்த 29-ந் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரியை தேடி வந்தனர். இதற்கிடையில் ராதாபுரம் கிராமத்தில் உள்ள ஏழுமலை என்பவரது நிலத்தில் ராஜேஸ்வரி பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருவண்ணாமலை அவலூர்பேட்டை ரோட்டில் வசித்து வரும் சமையல் மாஸ்டர் அஜித்முகமது (48) என்பவர் ராஜேஸ்வரியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பழக்கம் இருந்தது. பின்னர் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இந்த நிலையில் சம்பவத்தன்று 2 பேரும் மது குடித்து கொண்டிருந்தோம். அப்போது ராஜேஸ்வரி, எனக்கு கொடுத்த ரூ.40 ஆயிரத்தை திருப்பி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த நான் கையால் தாக்கியதில் ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பயந்து போன நான் பிணத்தை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.