செய்திகள்
பாபநாசம் அணை

பாபநாசம்-சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 3 அடி உயர்வு

Published On 2019-09-07 04:55 GMT   |   Update On 2019-09-07 04:55 GMT
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒரு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. அதிகபட்சமாக அடவிநயினார் அணை பகுதியில் 20 மில்லி மீட்டர் மழை பெய்தது.

பாபநாசம் மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அணைக்கு இன்று காலை வினாடிக்கு 3661.11 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1404.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் பாபநாசம் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

நேற்று 115.80 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 118.60 அடியாக உள்ளது. இதுபோல சேர்வலாறு அணையிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 128.48 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று காலை 131.43 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை வினாடிக்கு 538 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் சற்று உயர்ந்து இன்று காலை 51.75 அடியாக உள்ளது.

மற்ற அணைகளிலும் ஓரளவு நீர்மட்டம் உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் விவசாயத்திற்கு திறந்து விடப்படுகிறது.

குற்றாலம் மலைப்பகுதியில் இன்றும் தொடர்ந்து சாரல் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. மெயினருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் இன்று ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிகமாக சென்று குளித்து வருகிறார்கள். பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி பகுதிகளிலும் இன்று தண்ணீர் நன்றாக விழுந்தது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அடவிநயினார் -20

குண்டாறு-10

கடனாநதி-10

பாபநாசம்-8

சேர்வலாறு-6

செங்கோட்டை-3

மணிமுத்தாறு-1.

Tags:    

Similar News